சத்தியமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனின் தங்கையை கொன்றதாக கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு சுபாஷ் (21) என்ற மகனும், ஹாசினி (15) என்ற மகளும் உள்ளனர். சுபாஷ்
சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி ஓட்டி வருகிறார். ஹாசினி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் மஞ்சுவை சுபாஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுபாஷ், மஞ்சு இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் சுபாஷ் தங்கை ஹாசினியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் எரங்காட்டூர் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சுபாஷ் மனைவி மஞ்சுவின் தந்தை பிக்கப் வேனால் மோதியதாக கூறப்படுகிறது. வேன் மோதியதில் சுபாஷ் மற்றும் அவரது தங்கை ஹாசினி படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹாசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சந்திரா ஆகிய இருவர் மீது தன்னை கொல்ல முயன்றாக சுபாஷ் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பவானிசாகர் போலீசார் சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்து வீட்டில் இருந்த கார் மற்றும் இரண்டு பைக்குக்கு 10 பேர் கொண்ட கும்பல் தீ வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஈரோடு
மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.