மக்கள் நலப்பிரச்னைகளை நிறைவேற்ற கோரி நகராட்சி தலைவியை சிறை வைத்த கவுன்சிலர்கள்!

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் இருந்து முறையான பதிலளிக்காத  நகராட்சி தலைவியை வெளியேறவிடாமல் கதவை பூட்டிய கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.  தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 வார்டு கவுன்சிலர்கள் உள்ள சூழலில்,…

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் இருந்து முறையான பதிலளிக்காத  நகராட்சி தலைவியை வெளியேறவிடாமல் கதவை பூட்டிய கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 வார்டு
கவுன்சிலர்கள் உள்ள சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டை
நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தின் போது, ஏற்பட்ட
பிரச்சனையில் கவுன்சிலர்களும், நகர்மன்ற தலைவியும் ஒருவரை ஒருவர்
தாக்கி கொண்டனர். இச்சம்பவம் தொடர்பான காட்சிகளும் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் செங்கோட்டை காவல் நிலையத்தில்
ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் அளித்த நிலையில், இரு தரப்பினர் மீதும் செங்கோட்டை போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று நகர மன்ற கூட்டமானது நடைபெற்றது.

கூட்டத்தின் போது, 5 தீர்மானங்கள் மன்ற பொருளாக வைக்கப்பட்டு உறுப்பினர்களின்
கருத்து கேட்காமலே 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக திமுக கவுன்சிலரான
பேபி ரஷப்பாத்திமா என்பவர் கூற, தொடர்ந்து ஆவேசம் அடைந்த கவுன்சிலர்கள் மக்கள்
நலப்பிரச்சினைகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுவது
கண்டனத்திற்குரியது என பிரச்சனையில் ஈடுபட்டனர்.

திமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அல்லாத ஒரு நபர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, திமுகவை சேர்ந்த நபரை போலீசார் கூட்டரங்கில் இருந்து
வெளியேற்றினர்.

அப்பொழுது, நகராட்சி தலைவியான ராமலட்சுமி கூட்டரங்கில் இருந்து வெளியே செல்ல
முயற்சி செய்யவே, கவுன்சிலர்கள் மக்கள் குறைகளை தீர்த்து வைக்காமல் வெளியே
செல்ல கூடாது எனக் கூறி கதவைப் பூட்டினர். அதனை தொடர்ந்து, பின்பக்க கதவை திறந்து நகராட்சி தலைவி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறியனார்.

அனுமதி இல்லாமல் கூட்டரங்கில் வீடியோ எடுத்த நபர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் வார்டு பகுதியில் உள்ள மக்கள்
நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர்
(பொறுப்பு) ஜெயப்ரியாவை சந்தித்து கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.

இந்த சம்பவத்தால் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.