பாம்பன் அருகே பலத்த சூறைக்காற்று காரணமாக மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னந்தோப்பு எரிந்து சேதமடைந்தது.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் குந்துகால் மீன்பிடித்துறைமுகம் செல்லும் வழியில் பாம்பனை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. பாம்பன் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
இதனால் தென்னந்தோப்பின் மேல் பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பியின் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தோப்புக்குள் காய்ந்து கிடந்த குப்பைகளில் பற்றியதால் தீ மளமளவென எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை தீயில் எரிந்து சேதமடைந்தன.







