திருவாரூர் கமலாலயம் குளத்தில் படகில் பயணம் செய்த முதலமைச்சர்!

திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமலாலயம் குளத்தில் படகில் பயணம் செய்தார். இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் நெல் சேமிப்புக்…

திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமலாலயம் குளத்தில் படகில் பயணம் செய்தார்.

இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பிற்பகல் 3 மணியளவில் சந்நிதி தெருவுக்கு வந்த முதல்வர், அங்கு காத்திருந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் மாலையில், காட்டூருக்குச் சென்ற முதலமைச்சர் அங்கு, கருணாநிதியின் தாயார்
அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

https://twitter.com/mkstalin/status/1628060972727341063?s=46&t=kdcZZQUPYnDvkBgC1la2Dw

இதைத்தொடர்ந்து, தஞ்சை சாலையில் கட்டப்பட்டுவரும் நெல் சேமிப்புக் கிடங்கு பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார். சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மக்களவை திமுக உறுப்பினர் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.

இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்!” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.