அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

“யூடியூப் சேனலில் மத உணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது,  பட்டாசு வெடிக்கக்…

“யூடியூப் சேனலில் மத உணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது,  பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்பு தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.  இந்த சம்மனுக்கு எதிராகவும்,  தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்ததோடு,  மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.  இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அந்த மேல்முறையீட்டு மனுவில்,  நீதிமன்ற சம்மனுக்கும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த  மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  இந்த  வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபான்கர் தத்தா அமர்வு விசாரித்தது.  இதனையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  மேலும்  சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.