திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
கர்நாடகாவின், ஸ்ரீனிவாஸ்பூர் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் சைத்ரா(26). இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன்பு இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்களுடன் சைத்ரா இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.இதைக் கண்டு பதறிய பெற்றோர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு சைத்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் உடனே சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து மணப்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தகவலறிந்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, “சைத்ராவின் வாழ்நாளில் இது மிகமுக்கியமான நாள். ஆனால், விதியின் திட்டம் வேறாக இருக்கிறது. அவரின் பிரிவிலும் பெற்றோர் செய்த செயல் மகத்தானது” என்று குறிப்பிட்டார்.
சில தினங்களுக்கு முன்பாக குஷால்நகர் பகுதியை சேர்ந்த பிரஜ்வாலுக்கு (21) சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட்டது. இவரது பெற்றோரும் துரிதமாக செயல்பட்டு அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இவர்களது செயலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேடையிலேயே மயங்கி விழுந்த பெண்ணின் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.