ஜப்பானில் மரணம் அடைந்த சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின், தாயிடம் சேலம் காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த மரியா என்ற பெண் புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் திருமணத்திற்கு பின் ஜப்பானில் சென்று வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மரியா திடீரென உயிரிழந்து விட்டதாக அவரது தாய் லூசியாவிற்கு தகவல் வந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த லூசியா, வரதட்சனை கொடுமையால் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின், அவரது தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என சேலம் காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ள மரியாவின் உடலை, சென்னை மாநகர காவல் ஆணையர் பெற்று, சேலம் ஸ்டீல் பிளாண்ட் காவல் நிலையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உடலைப் பெற்ற பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
– இரா.நம்பிராஜன்








