தேனி கொண்டு செல்லப்பட்டது டிஐஜி விஜயகுமார் உடல்! அமைச்சர் ஐ.பெரியசாமி, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் அஞ்சலி!

டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  கோவை சரக டிஐஜி விஜயகுமார்…

டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர்  பணியாற்றியுள்ளார்.

அதே போல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின்  உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், டிஐஜி விஜயகுமார் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அப்போது டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.டி.ஜி.பி முன் விஜயகுமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது விஜயகுமாரை நம்பிதானே இருந்தோம் என அவரது தாய் ராஜாத்தி கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

டிஜிபி சங்கர் ஜிவாலுடன், காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதோடு, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி க்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது  ஐ.பி.எஸ் அதிகாரி துரை கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதே போன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆகியோரும் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இவர்களை தொடர்ந்து தேனியில் பள்ளி பருவத்தில் விஜயகுமாருடன் படித்த 20 க்கும் மேற்பட்ட அவரது பள்ளி நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், பள்ளியில் அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.