ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற #BJP | புதிய அரசு பதவியேற்பு எப்போது?

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக…

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மீண்டும் அருதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை அடுத்து புதிய அரசு வரும் 17ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரோடு சிலர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும் 17 ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. ஆளும் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்பதும் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.