உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட ஓய்வெடுக்காமல் உடனடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுக்கச் சொன்ன சிறப்பான முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார் என அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தாலும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மூலமாக எங்கும் நீர் தேங்கி பொது மக்களுக்குச் சிரமம் வராமல் இருந்துள்ளது எனவும், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பது குறித்துக் கூட முன்பாகவே அறிவித்து எந்த கரையோரப் பகுதியிலும் சேதாரமில்லாமல் பார்த்துக்கொண்டோம்.
ஒரு வருட ஆட்சியின் சாதனையாக ஏறத்தாழ 300 சதவீத அளவிற்குக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. அப்படி இருந்தும் எந்த பாதிப்பும் இல்லாத சூழ்நிலை தமிழ்நாடு அரசு செய்துள்ளது எனக் கூறிய அவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட ஓய்வெடுக்காமல் உடனடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுக்கச் சொன்ன சிறப்பான முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், போன ஆட்சியில் வெள்ளத்தடுப்புக்காக அந்த பணிகளைச் செய்யவில்லை அவர்கள் செய்த காரியம் அவர்களுக்கு வேண்டியதை மட்டும் செய்துகொண்டார்கள். நம்முடைய
அரசாங்கத்தைப் பொறுத்த அளவு எந்த பகுதிக்கு முன்னுரிமை எது உண்மையிலேயே தேவை என்று அதிகாரிகளோடு கலந்து அதற்காக ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் இன்று அதை நாங்கள் செய்துள்ளோம் எனக் கூறினார்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சென்னையில் மழை பெய்தால் எங்கும் தண்ணீர் தேங்கும் இந்த முறை தண்ணீர் தேங்காத அளவிற்கு வாய்க்கால் வசதிகளை மாநகராட்சி செய்துள்ளது. வெளி மாவட்டங்களில் மழை பெய்யும் நேரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என விளக்கமளித்தார். தொடர்ந்து, இந்த ஆண்டு பாதிப்பிற்கு போதிய நிதி உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த மழையைப் பொறுத்து அளவிற்கு மத்திய அரசாங்கத்திடம் நிதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எப்பொழுதும் நாம் கேட்கும் ஒரு தொகையாக இருக்கும் மத்திய அரசு கொடுப்பது ஒரு தொகையாக இருக்கும். இது காலமாக நடப்பதுதான் மத்திய அரசு கொடுப்பது போக மீதத்தைத் தமிழ்நாடு அரசு ஈட்டும் எனக்கூறினார்.








