“குண்டர் தடுப்பு சட்டம் ஐ.ஜி.க்கு அதிகாரம் வழங்க முடியாது” – தமிழ்நாடு அரசு!

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் காவல் துறை தலைவர்களுக்கு (IG) வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் தன் மகன்…

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் காவல் துறை தலைவர்களுக்கு (IG) வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் தன் மகன் தமிழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், குண்டர் சட்ட உத்தரவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக மண்டல காவல்துறை அதிகாரிகள் (IG) குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு 19.06.2023 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது இருக்கும் நிலையை தொடர்வதே சரியானதாக அமையும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தடுப்பு சட்டத்தை பிறப்பிப்பதே சரியானதாக இருக்கமுடியும் என்றும் காவல்துறை ஐ.ஜிக்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கக்கூடாது எனவும், தற்போது தமிழ் நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன.

காவல்துறையைப் பொறுத்தவரை வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு என்று 4 மண்டலங்களில் நான்கு காவல்துறை தலைவர்கள் உள்ளனர். ஓவ்வொரு மண்டல காவல்துறை தலைவரின் கீழ் குறைந்த பட்சம் பத்து மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியை மேற்பார்வை கொள்வதுடன் அந்தந்த மாவட்டங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பிற பணிகளைக் கவனிப்பதில் காவல்துறைத் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் தற்போது பயன்பாட்டிலுள்ள குண்டர் சட்ட விதிகள் சீராக உள்ளதால் தற்போது நடைமுறையிலுள்ள குண்டர் சட்ட விதிமுறைகளையே பின்பற்றலாம் எனவும், மாவட்ட ஆட்சியரே குண்டர் தடுப்பு சட்டத்தை பிறப்பிப்பதே சரியாக இருக்க முடியும். அதிகார பிரிவு தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதை தடுக்கும்.

எனவே திருத்தங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை என அரசு கருதுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவின் நிலைப்பாட்டை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.