நாளை தொடங்குகிறது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி…

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை, பெரிய மேட்டில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை 4.45 மணி அளவில் சென்னை வருகிறார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விதிமுறைகள் மற்றும் புள்ளி வழங்கும் முறைகள்:

1) ஸ்விஸ் விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும்.

2) ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.

3) ஒவ்வொரு ஆட்டத்திற்கான அணியில் மொத்தம் 5 பேர் இடம் பெறுவார்கள். இதில், ஒருவர் மாற்று வீரராக இருப்பார். அணியின் கேப்டன் ஆடும் வீரராக இருக்க வேண்டும்.

4) முதல், 2-வது, 3-வது, 4-வது செஸ் போர்டுகளில் யார்-யார் ஆடுவார்கள்? என்பதை அணி நிர்வாகம் வரிசைப்படுத்தி முன்கூட்டியே எழுதிக் கொடுத்து விட வேண்டும். கடைசி நேரத்தில் வரிசையை மாற்ற முடியாது.

அண்மைச் செய்தி: ‘சென்னை வரும் பிரதமர்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்’

5) ஆட்டத்தில் முதல் போர்டில் ஆடும் வீரருக்கு ஓய்வு கொடுத்தால், 2-வது வரிசை வீரர் முதல் போர்டில் ஆடுவார். அந்த மாதிரியான சூழலில் மாற்று வீரர் 4-வது போர்டில் தான் விளையாட முடியும். எந்த காரணத்தைக் கொண்டும் மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் ஆட வைக்கப்படமாட்டார்.

6) வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரைப் புள்ளி வழங்கப்படும். தோல்விக்குப் புள்ளி கிடையாது.

7) 4 வீரர்கள் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதுடன், அந்த அணிக்கு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும். ஆட்டம் 2-2, 1½-1½ என்ற வீதம் டிராவில் முடிந்தால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.

8) ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்திலிருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும்.

9) 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக் கொள்ள முடியாது.

10) 11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

11) ஒருவேளை இரு அணிகள் ஒரே புள்ளியிலிருந்தால் ஆட்டங்களில் அதிக வெற்றி மற்றும் தங்களிடம் வீழ்ந்த அணிகளின் வலிமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும்.

12) 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெறும் அணிக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படும்.

13) இது தவிர டாப்-3 தனிநபருக்கும் பதக்கங்கள் உண்டு. இதற்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இந்த பதக்கத்தைப் பெற ஒரு வீரர் குறைந்தது 8 ஆட்டங்களில் ஆட வேண்டியது அவசியமாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.