டெக்சாஸ் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 81ஆக அதிகரிப்பு!

டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் முகாம் ஒன்று இருந்துள்ளது. இதனால் முகாமில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்டறிந்து காணாமல் போனவர்களை மீட்கும் பனி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.