வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், குல்தீப் சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.







