தென்காசி இளம்பெண் கடத்தல் விவகார வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்துள்ளனர். 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வீடு புகுந்து கடத்திச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் கிருத்திகா மற்றும் வினித் ஆகியோரது வீடியோ மற்றும் ஆடியோ உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். வினித்தும் மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 11ம் தேதி கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். அப்போது கிருத்திகாவை 13ம் தேதி வரை காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கவும் விரிவான விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி தென்காசியை அடுத்த மேலகரம் இந்திரா நகரில் உள்ள மகளிர் காப்பகத்தில் கிருத்திகா தங்க வைக்கப்பட்டார். அங்கு 3 நாட்கள் கவுன்சலிங் கொடுக்கப்பட்ட நிலையில், செங்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சுனில்ராஜா முன்னிலையில் கிருத்திகாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் சுமார் 1 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.








