இந்து கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைககள் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனிஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஆக்கிரமிப்புகளில் 14 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 1100 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அப்போது, வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், 50 ஆண்டுகாலமாக உள்ள அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது.
மேலும், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்கள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.