அரசியல், சமூகவியல், வாழ்வியல் ஆகிய மூன்றிலும் கல்விக்கான முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழர்கள் என்று கோவையில் நியூஸ்7 தமிழ் நடத்தும் கல்விக் கண்காட்சியில் தொடக்க விழா நிகழ்ச்சியில், நியூஸ்7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் தெரிவித்தார்.
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் கோவை கொடிசியாவில் மாபெரும் கல்விக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், ஏராளமான மாணவ மாணவிகளும் பங்கேற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கல்விக் கண்காட்சியில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வசதிக்காக ஆர்ச் முதல் கொடிசியா வரை இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேராசியர் கு.ஞானசம்மந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி, பெஸ்ட் கல்வி அறக்கட்டளை செயலாளர் அப்துல் ரஷீத், மனித வளம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் திருக்கோஷ்டியூர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : கோவையில் நியூஸ்7 தமிழ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி தொடங்கியது – ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய நியூஸ்7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், “பெரு நகரங்களை கடந்து சிறிய நகரங்களிலும் கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது கல்வி. ஏன் இதுபோன்ற கல்விக் கண்காட்சி பிற மாநிலங்களில் நடைபெறுவது இல்லை? என்ற கேள்வி எழலாம்.
வடமாநிலங்களில் வசிப்பவர்கள் பிற குடும்பங்களில் உள்ள இளம் பருவத்தினரை சந்திக்கும் போது, நீங்கள் அடுத்த என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? என்று கேட்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தான் நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? அடுத்து என்ன படிக்கப் போகிறீர்கள்? என்று கேட்பார்கள்.
அரசியல், சமூகம், வாழ்வியல் ஆகிய மூன்றிலும் கல்விக்கான முக்கியத்துவம் கொடுத்து வருபவர்கள் தமிழர்கள், தமிழ் குடும்பங்கள். அதனால் தான், அடிப்படையில் கல்வி முதற்கொண்டு நமக்கு எல்லா வசதிகளும் சாத்தியமாகி இருக்கிறது. கல்விக்காகத்தான் நாம் நிறைய முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். நான் படிக்கல.. என் பிள்ள படிக்கனும் என்று தான் நம்முடைய பெற்றோர்கள் சொல்வார்கள். நான் சம்பாதிக்கல.. என் பிள்ள சம்பாதிக்கனும் என்று எந்த பெற்றோரும் சொல்வது இல்லை.
இத்தகைய சூழலில் இது போன்ற கல்விக் கண்காட்சியின் மூலம் நேரடியாக கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் சந்தித்து, சந்தேகங்களை கேட்டு உரையாடிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஒரு ஊடகமாக நாங்கள் இதைச் செய்துள்ளோம். அவ்வளவு எளிதாக இது சாத்தியப்படவில்லை. பெரிய உழைப்பை இதற்காக செலுத்தியிருக்கிறோம். எங்கள் நிறுவனத்தைச் சார்ந்த பலர் இந்த கல்விக் கண்காட்சிக்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பொதுவாக எந்த உழைப்பும் தோற்காது. சரியான உழைப்பை சரியான திட்டமிடுதலோடு செய்தால் அதில் வெற்றி நிச்சயம். கடந்த ஆண்டைப் போல எங்களின் முயற்சியை, கோவை மக்களும், பல்வேறு மாவட்ட மக்களும் வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகிறோம். கடந்த 20 நாட்களாக, பல்வேறு வழிகளில் ஒன்றரை லட்சம் மாணவர்களிடம் இந்த கல்வி கண்காட்சியை எடுத்துச் சென்றுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு, இதற்காக உழைத்த நியூஸ்7 தமிழின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.