தமிழினம் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும் என்று திராவிடமாடல் பயிற்சி கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி மகளிர் மாணவர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன், தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா, மாநில செய்தி தொடர்பு இணை செயலாளார் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்வில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நாமெல்லாம் தமிழினம் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும் என்பதையே திமுக தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும். இந்தியாவில் நிறைய மொழிகள் தற்போது காணாமல் போய்விட்டன வெறுமனே புத்தகத்தில் மட்டுமே உள்ளது பேசுபவர்கள் யாரும் இல்லை.
தமிழ் மொழி செம்மொழி ஆக்கப்பட்டு இன்று வரை நம் மொழியை காப்பதில் திராவிட தலைவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஆகவே மொழி உணர்வு நமக்கு வேண்டும் அதையே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதியை திமுக கொண்டு வந்தது. திமுக கூட்டத்தில் ஏன் துண்டு போடுகிறார்கள் என கேலி செய்த பாஜகவினருக்கு கூறிக் கொள்கிறேன். இடுப்பில் துண்டை கட்டாதே அதைத் தோளில் போடு என்று அண்ணா கூறியதைத் தான் திமுக செய்தது சுயமரியாதையை உணர்வை ஊட்டுவதற்கு தான் இந்த வழக்கம். கொள்கையில் பிடிப்புடனும் சமுதாய உணர்வோடும் இருப்போம் என்று பேசினார்.