தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா 2வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து மே மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்னரே திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தளர்வுகள் அளிக்கப்பட்டபோதெல்லாம் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.
சர்பாட்டா பரம்பரை, திட்டம் இரண்டு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகின. இதனிடையே திரையரங்குகளை திறக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதால், அதன் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







