சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைக் காப்பதற்காக, நீதிமன்ற உத்தரவுப்படி, இரவு நேரப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றாடம் காலை 6 மணி முதல் போக்குவரத்து துவங்கும்.
இந்நிலையில் தான் நேற்று கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பல்லடம் செல்வதற்காக மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி ஒன்று , சோதனை சாவடி அருகே பழுதாகி
நின்றது. இதனால் மக்காச்சோளத்தை உண்பதற்காக காட்டுப்பகுதியில் இருந்து வெளியே
வந்த ஒற்றைக் காட்டு யானை, அந்த லாரியை நெருங்கி நின்றது.
ஒற்றைக் காட்டு யானை நின்றதால், அச்சத்தின் காரணமாக, எந்த வாகனமும் செல்ல முடியாமல் அனைத்து வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டது. காலை 7.00 மணியிலிருந்து இரு மாநிலங்களில் இருந்து வந்த கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. சுமார் 40 நிமிடங்களாக காட்டு யானை நடுரோட்டில் நின்று மக்காச்சோளத்தை உண்டு, அங்கும் இங்கும் நடமாடியதால் அனைவரும் பீதி அடைந்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையைத் துரத்தும் முயற்சியில்
ஈடுபட்டனர். பேருந்தில் வந்தவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி,
அதனைப் புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். ஒற்றையானை என்பதால் மனிதர்களைத் தாக்கி விடக்கூடும் என்ற பயத்தால் வனத்துறையினர் தற்பொழுது அதனை துரத்தும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
—ரெ.வீரம்மாதேவி







