பிளஸ்- 2 தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு, பிளஸ் 2 தேர்வையும் தள்ளிவைத்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பில், “+2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.
அதுபோலவே, கல்லூரி /பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் கல்லூரி / பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.







