ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததுள்ளன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், தமிழ்நாடு அரசின் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது என வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. நீதிபதி சந்துரு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துக்களை கோரவில்லை. முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது இவ்வாறு ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுக்களின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழக அரசின் பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







