2025-ல் தொழுநோய் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது அரசின் இலக்காக உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராணிமேரி கல்லூரியில் தொழு நோய் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் , சென்னையில் மிகவும் புகழ்பெற்ற அடையாளம் கொண்ட கல்லூரி ராணி மேரி கல்லூரி. அப்பேற்பட்ட இந்த கல்லூரியை 19 ஆண்டுகளுக்கு முன்னாள் இடித்து இங்கு தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று கூறியபோது அதை எதிர்த்து போராடிய வீரமங்கைகள் தான் இந்த கல்லூரி மாணவிகள். இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று அன்று தற்போதைய முதலமைச்சரான ஸ்டாலினும் போராடினார். அவருடன் நாங்களும் போராடி சிறை சென்றோம்.
தொழு நோய் பற்றி மருத்துவர்கள் தெரிவிக்கக் கூடிய அனைத்து விஷயங்களை சாதாரண கோலங்கள் மூலம் இந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாள் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர் அன்னை தெரேசா. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்கிற சேவை நேரடியாக தெய்வத்துக்கு செய்கின்ற சேவையாக இருக்கும்.
தொழு நோயால்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உதவித் தொகையை அதிகரித்து தர வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொண்ட பொழுது 1500- ல் இருந்து 2000 ருபாயாக உயர்த்தி தர ஆணையிட்டார். 2025-ல் தொழுநோய் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது அரசின் இலக்காக உள்ளது. நிச்சயம் அதை செய்வோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா