ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையின்போது, கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும் முக்கிய கேள்வி ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் எழுப்பியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஏபி பார்ம்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவது தொடர்பாக அவரது தரப்பு தற்போது எழுப்பியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது. தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்து விட்டதை ஆணையம் சுட்டிக்காட்டியது. தற்போது எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்று கூறிய தேர்தல் ஆணையம், இது ஒன்றும் பொதுத் தேர்தல் கிடையாது என்றும் ஒரே ஒரு தொகுதிக்குத்தான் தேர்தல் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு வர வேண்டும் என தாங்கள் காத்திருக்கிறோம் எனக் கூறிய தேர்தல்ஆணையம், இதில் தங்களால் முடிவு எடுக்க இயலவில்லை என்று தெரிவித்தது.
உட்கட்சி விவகாரங்களில் எந்த வழக்குகளிலும் தாங்கள் ஒரு கட்சியாக சேர்க்கப் படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உட்கட்சி பிரச்சனைகளில் தலையிட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
அதிமுக பொதுக் குழு தொடர்பான வழக்குகள் இல்லை என்றால், தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என்று கூறிய தேர்தல் ஆணையம், நாங்கள் இந்த விவகாரத்தில் புதிதாக சேர்க்க பட்டிருக்கிறோம் எனவே கொடுக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை, எனவே விரிவான பதிலை தாக்கல் செய்ய திங்கள் கிழமை வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பின்னர் கீழ்க்கண்டவாறு வாதங்கள் நடைபெற்றன.
எடப்பாடி பழனிசாமி தரப்பு
முன்னர் இதுபோன்ற நிலை வந்தபோது தேர்தல் ஆணையம் இடைக்கால நிவாரணம் வழங்கியது
நீதிபதிகள்
தற்போது தேர்தல் ஆணையத்தை தவிர்த்து வேறு எவரையும் கேட்கப்போவதில்லை.
ஒரே ஒரு தொகுதி என்றாலும், தேர்தல் தேர்தல் தான். தேர்தல் ஆணையம் நிலைப்பாடு எடுக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் :-
அதிகாரிகளுடன் ஆலோசித்து திங்கட் கிழமை பதில் கூறுகிறோம்.
கட்சியின் சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை, அதேபோல அதுகுறித்து எந்த பிரச்சனைகளும் எழுப்பப்படவில்லை
நீதிபதிகள்:-
அவர்கள் இன்று மோதிக் கொள்வார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள். அதை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும். உங்கள் வேலை நீதிமன்ற உத்தரவை பார்ப்பது தானே:
எடப்பாடி பழனிசாமி தரப்பு:-
ஜூலை 11ந்தேதி பொதுக்குழு தீர்மானத்தை பதிவேற்றாத தேர்தல் ஆணையத்தின் செயலை எந்த வகையிலும் ஏற்க முடியாது
தேர்தல் ஆணையம்:-
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்தான் பதிவேற்றவில்லை.
நீதிமன்றம்:-
எந்த தடை உத்தரவும் இல்லாத நிலையில் ஏன் ஜூலை 11ந்தேதி பொதுக்குழு தீமானங்களை நீங்கள் (தேர்தல் ஆணையம்) ஏற்காமல் இருந்தீர்கள் . நாங்கள் தான் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லையே பின் உங்களுக்கு என்ன பிரச்சனை ?
ஓ.பி்.எஸ் தரப்பு :-
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின் மீண்டும் புதிய வழக்கை தாக்கல் செய்து இபிஎஸ் இடைக்கால உத்தரவு கேட்பது நடைமுறையில் இல்லாத ஒன்று ஆகும்.இது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது இவ்வாறு பரபரப்பாக வாதங்கள் நடைபெற்றன.