தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுகுறித்து விரிவாகக் காணலாம்.
கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கஞ்சா வேட்டை 1.0, கஞ்சா வேட்டை 2.0 நடந்து முடிந்த நிலையில், கடந்த 12ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 19 நாட்களில், 1,811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1 கோடியே 847 லட்சத்து 1085 ரூபாய் மதிப்புள்ள சுமார் 1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பயன்படுத்திய 153 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 8 லட்சத்து 83 ஆயிரத்து 934 ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாக போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக, 282 காவல் நிலைய எல்லைகளில் பெரும்பாலும் போதைப்பொருள்களின் விற்பனை அறவே தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போதைப் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் வழியாக வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க அதிக காவலர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.