சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ”நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாநாட்டை தொடங்கினோம். தற்போது இந்த மாநாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. தொழில்நுட்பத்துறையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டின் மைய அச்சு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும். அறிவியல் அணுகுமுறைகளை தமிழ்நாடு கையாளுகிறது. தொழில்நுட்பம் எல்லோரையும் சமமாக சென்றடைய வேண்டும். புதுயுகத் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக மாறிவருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென் பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று மத்திய அரசு சொல்கிறது. மத்திய அரசின் இந்த தரவு தான் திராவிட மாடல்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







