Swiggy, Uber உள்ளிட்ட இணையம்சார் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் – தமிழ்நாடு அரசு அரசாணை!

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர் நல வாரியம் எனும் புதிய நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும்…

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர் நல வாரியம் எனும் புதிய நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

“தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில், உணவு விநியோகம்,  மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள்,  இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக. 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர் நல வாரியம் (Tamil Nadu Platform Based Gig Workers’ Welfare Board) எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் (Gig) தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.