இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். விசைப்படகில் கீழகாசாகுடிமேடு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம் போல் கோடியகரைக்கு தென்கிழக்கு பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, நேற்று புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.








