ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது தேவையற்ற குழப்பம் என சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிகாலத்தில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்ட ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதனிடையே நவம்பர் 1தான் தமிழ்நாடு நாள் என்றும், ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் என்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்கள் நாங்கள் தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக நவம்பர் 1ஆம் தேதியை கொண்டாடி வருகிறோம். தமிழக அரசு ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது அவசியமற்ற குழப்பம் என்று தெரிவித்தார்.
குழந்தை பிறந்த தேதியில் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுவது போல் உள்ளது ஜூலை 18 தமிழ்நாடு நாள் அறிவிப்பு என்ற அவர், வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்தார்.
பொதுச் சொத்துக்களை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருவதன் காரணமாக இந்தியா என்பது வருங்காலங்களில் பெயரளவில் மட்டுமே இருக்கும். 100 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட இந்தியா இருக்காது என்றும் கூறிய அவர், முன்னாள் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை என்பது பேரம் பேசும் செயல் என்றும் தெரிவித்தார்.