தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், தெலுங்கில் டாப் ஹீரோக்களை இயக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
கொரோனா, முதல் அலை வந்துச் சென்றதில் இருந்து தமிழ் சினிமா தட்டுத் தடுமாறி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அலை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்ற மொழி ஹீரோக்களை இயக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். பட்ஜெட் தொடர்பாக இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே லைகா, ஷங்கர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.

இந்நிலையில், அவர் தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படம் பான் இந்தியா படமாக தயாரிகிறது. இதையடுத்து ’அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். அதில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். படம் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில், கொரோனாவுக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இயக்குநர் மோகன் ராஜா, ’அந்தாதுன்’ ரீமேக்கை தமிழில் இயக்க இருந்தார். பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இருந்து திடீரென விலகிய அவர், லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்க இருக்கிறார். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி நடித்த’தர்பார்’ படத்தை இயக்கிய முருகதாஸ், அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. கதைப் பிரச்னை காரணமாக அவர் அந்தப் படத்தில் இருந்து விலகினார்.
அஜித் நடிப்பில் பில்லா 2, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், ’ஷேர்ஷா’ என்ற இந்தி படத்தை இப்போது இயக்கி இருக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
’மற்ற மொழிகளில் தமிழ் இயக்குநர்கள் கவனம் செலுத்தினாலும் அங்கும் அவர்கள் வெற்றிபெறுவதுதான் முக்கியம். ஹிட் கொடுத்தால் அங்கும் தொடர்ந்து படம் இயக்க வாய்ப்பு வரும்’ என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.