நையாண்டியால் மக்களை கவர்ந்த மணிவண்ணன்

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் முத்திரைப் பதித்தவர் மணிவண்ணன். இவரளவுக்கு கொங்கு பாஷையில் சமகால அரசியலைக் கிண்டல் செய்தவர்கள் குறைவு தான்.. மணிவண்ணனை பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும்.…

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் முத்திரைப் பதித்தவர் மணிவண்ணன். இவரளவுக்கு கொங்கு பாஷையில் சமகால அரசியலைக் கிண்டல் செய்தவர்கள் குறைவு தான்..

மணிவண்ணனை பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இதனை அவரது படங்களிலும் பதிவு செய்தார்.

கோவை மாவட்டம் சூலூரில் 1953-ல் சுப்ரமணியம் – மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்த மணிவண்ணனுக்கு, பள்ளி நாட்களில் மேடை நாடகங்களில் பங்கேற்றது திரைப்படத்துறையில் கால்பதிக்க காரணமாக அமைந்தது.

“கிழக்கே போகும் ரயில்” படம் குறித்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு, இவர் எழுதிய விமர்சனக் கடிதம் தான், பாரதிராஜாவின் உதவி இயக்குநராகச் சேர வழிவகுத்தது.

“நிழல்கள்’, “அலைகள் ஓய்வதில்லை’ “காதல் ஓவியம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய மணிவண்ணன், “ஆகாய கங்கை’ படத்துக்கு வசனத்துடன் திரைக்கதையை மனோபாலாவுடன் இணைந்து எழுதினார். பல படங்களுக்கு கதை எழுதிய மணிவண்ணனின் முதல் படமாக “கோபுரங்கள் சாய்வதில்லை’ வெளியானது.

1983ல் “ஜோதி’, “வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்’, “இளமைக் காலங்கள்’ படங்களை இயக்கிய மணிவண்ணன், 1984-ல் “நூறாவது நாள்’, “இங்கேயும் ஒரு கங்கை’ படங்களை இயக்கினார். “நூறாவது நாள்” படத்தில் சத்யராஜ் மொட்டை போட்டு நடித்ததால், அந்த படம் பெரிய வெற்றிப் பெற்றதாக கருதி, நாயகர்கள் பலரும் தங்கள் படங்களில் மொட்டை போட்டு நடிக்க ஆரம்பித்தனர்.

50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை….

1986-ம் ஆண்டு தீபாவளி அன்று, மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘விடிஞ்சா கல்யாணம்’, ’பாலைவன ரோஜாக்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே வெற்றியை குவித்தன. இரண்டிலும் சத்யராஜ் நடிக்க, பாலைவன ரோஜாக்கள் படத்துக்கு மு.கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார்.

மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அமைதிப்படை மணிவண்ணனை வெகுஜன இயக்குநராக பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. பத்துக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கும் மணிவண்ணன், சுமார் நானூறு படங்களில் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

’படையப்பா’ படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்த சிவாஜி, ”டேய் தாடிக்காரா, உன்னிடம் தொழில் இருக்குதுடா நீ பெரிய ஆளா வருவ” என்று பாராட்டியதும் உண்டு.

காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, முதல்வன், அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை, சங்கமம், பொற்காலம் என பல படங்கள் மணிவண்ணன் என்னும் மகா கலைஞனின் நினைவை தாங்கி நிற்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.