ஆப்கனிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளரும் தாலிபான் நிறுவனருமான முல்லா ஒமர் பயன்படுத்திய கார், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 வரை தாலிபான்களின் ஆட்சி இருந்தது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை பின் லேடன் தலைமையிலான அல் கய்தா அமைப்பு தாக்கி அழித்தது. இதையடுத்து, அல் கயிதாவையும், பின் லேடனையும் அழித்தொழிக்க முடிவு செய்த அமெரிக்கா, பின் லேடன் ஆப்கனிஸ்தானில் பதுங்கி இருந்ததால், அந்நாட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
அமெரிக்க தாக்குதல் காரணமாக, முல்லா ஒமர் வெள்ளை நிற டொயாட்டா காரில் தப்பி ஓடினார். அவர் பயன்படுத்திய அந்த கார், ஜாபுல் மாகாணத்தில் உள்ள ஒரு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது.
அதே மாகாணத்தின் ஷின்ஸ்கே மாவட்டத்தில் ஒரு சிறிய குடிசையில் பதுங்கி இருந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அமெரிக்க தாக்குதலில் முல்லா ஒமர் கொல்லப்பட்டார்.
தற்போது, ஆப்கனிஸ்தானில் மீண்டும் தாலிபான்களின் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, முல்லா ஒமர் பயன்படுத்திய புதைக்கப்பட்ட டொயோட்டா காரை தலிபான்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டு புதைக்கப்பட்ட டொயோட்டா காரை வெளியே எடுத்த தாலிபான்கள், காரை சுத்தம் செய்து சரி செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஆப்கனின் உள்துறை அமைச்சக அதிகாரி மெளல்வி அரிபுல்லா, தங்களின் அன்புக்குரிய தலைவரின் கார், காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்










