ஸ்வாதி மாலிவால் வழக்கு – பிபவ் குமாரின் காவல் ஜூன் 22வரை நீட்டிப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதலமைச்சர்…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை காண எம்.பி ஸ்வாதி மாலிவால் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் தன்னை அடித்து, உதைத்ததாக ஸ்வாதி மாலிவால் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள், பாஜக என பல கட்சிகள் தங்கள் கண்டத்தை தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அக்கட்சியின் அமைச்சர் அதிஷி மறுப்பும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த 18ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் பிபவ் குமார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் திஹார் சிறையில் இருக்கும் பிபவ் குமாரின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று காணொளி மூலம்  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஒருநாள் நீட்டித்தது. இதனையடுத்து இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.