ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி விழாவில் பேசிய மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினரால் ஆகஸ்ட் 15ஆம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர், 4 வாரங்களுக்கு இரு வேளையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை நாளை (செப்டம்பர் 10) முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 18ம் தேதி முதல் விசாரணை அதிகாரி முன்பு மீண்டும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.