அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவர் மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இவருக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தியது. அவர், தனது தரப்பு விளக்கத்தை வழக்கறிஞர் வாயிலாகச் சமர்ப்பித்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் தனக்கு எதிரான ஊழல், முறைகேடு புகார்களை முற்றிலும் மறுக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சூரப்பா மீதான விசாரணை முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக விசாரணைக் குழு அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார். சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஏற்கனவே விசாரணைக் குழு தெரிவித்திருந்த நிலையில், இறுதிக்கட்ட அறிக்கையைத் தயார் செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது எனவும் இந்த அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க நேரம் கேட்டிருப்பதாகவும் கலையரசன் தெரிவித்துள்ளார்.







