நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகாகாந்தி ஆகியோர் பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கி கொண்ட விவகாரத்தில் இரு தரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் பெங்களூரு விமான நிலையத்தில் பரஸ்பரம் தாக்கி கொண்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாககாந்தி, விஜய் சேதுபதி தன்னை அவதூறாக பேசிவிட்டு, தாக்கியதாக கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்த மனுவை விசாரித்த சென்னை சைதப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம். அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29ல் உத்தரவிட்டது. அதே நேரம், பெங்களூரு விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம் தொடர்பானது, சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல. எனவே, இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
இதையடுத்து, , சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தங்களிடையே உள்ள பிரச்னைகளை இரு தரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சமரச விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் மார்ச் 2ம் தேதி வீடியோ கான்பிரன்சிங் மூலம mediation-க்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








