மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க தமிழக காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணையின் போது சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர்கள், “அவருக்கு இதய நோய் உள்ளது, ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டது, பல உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி உள்ளார், எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டனர்.
தமிழ்நாடு அரசு தரப்பு, சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கை கலைக்க கூடும், மேலும் இவரின் பக்தர்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து நேரலாம், மேலும் இவருக்கு உரிய மருத்து உதவி, தேவையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது, எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கினர். சாட்சியங்களை கலைக்க முற்படக் கூடாது, கேளம்பாக்கம் பள்ளிக்கு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நிபந்தனைகளும் விதித்துள்ளனர். அதேவேளையில் சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் யூடியூப் சேனல் மூலமோ, அல்லது வேறு விதத்திலோ பிரச்சனை செய்ய நினைத்தால் தமிழக காவல்துறை உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தினர்.