அதானி நிறுவனத்தின் மீது குற்றசாட்டுகளை முன்வைத்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக் குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து அதானி நிறுவன பங்குகளும் அதானி நிறுவனத்தின் சந்தை மதிப்பும் சரிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹிண்டன்பர்க் அந்த அறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த பங்கு விலை உயர்வை காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை அதானி குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூறப்பட்டது.
அதானியின் அறிக்கைக்கு பதலளித்துள்ள ஹிண்டபர்க் நிறுவனம், முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் ’தேசியம்’ என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிக்கிறது. இந்தியா ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாடு. வளர்ந்து வரும் வல்லரசு நாடாகும். ஆனால், அதானி குழுமத்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என நாங்கள் நம்புகிறோம். தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது” என்று சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்து.
நாடாளுமன்றத்திலும் அதானி விவகாரம் குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பின. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் வகையில்,
ஹிண்டன்பர்க் அறிக்கை ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து,
வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரிய அந்த இரண்டு பொதுநல வழக்குகளையும் நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
– யாழன்