விசாகப்பட்டினத்தில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள கோபாலபட்டினம் பகுதியில் துணிக்கடை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே இன்று காலை அந்த துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், முதலில் புகை வெளியாகி கடையின் இரண்டு மாடிகளிலும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் தீக்கிரையாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திடீரென தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாகப்பட்டினம் தீயணைப்பு படையினர், கடையின் ஷட்டரை உடைத்து, தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த விசாகப்பட்டினம் போலீசார், முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா