திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல்குவாரி குட்டையில் இரண்டு பள்ளி மாணவர்கள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி பகுதியில் கல்குவாரி அருகே அதிக அளவிலான குட்டைகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று அந்த குளத்தில் குளித்துள்ளனர். பிறகு நீச்சலடித்து விளையாடியுள்ளனர்.
அப்போது, வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல், லோமிநாதன் ஆகிய இருவரும் குளத்தில் நீச்சலடித்து கொண்டு இருந்த போது குளத்திலுள்ள சேற்றில் கால் சிக்கி கொண்டதால் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடி சென்று குளத்தில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இரண்டு பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







