கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கல்விச்சேவையை பின்பற்றி, அருப்புக்கோட்டையில் “அருப்புக்கோட்டை நாடார் உறவின் முறை டிரஸ்ட்” சார்பில், ஏராளமான கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த கல்வி நிலையங்களுக்கு சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்றில், மாணவர்களின் உரிமை மறுக்கப்படுவது தான், தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை டிரஸ்டின் புதிய நிர்வாகிகள், கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில், கண்ணன் என்கிற காமராஜ் என்பவரது தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்றவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டிய முந்தைய நிர்வாகத்தினர், ஒப்படைக்க மறுத்ததுள்ளதுடன், வெற்றி பெற்றவர்களை சார்ந்த மாணவ மாணவிகளின் கல்வி உரிமையை மறுத்து வருவதும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.பி.கே.எஸ்.எஸ்.தியாகராஜன் மெமோரியல் மெட்ரிகுலேஷன் பள்ளியில், புதிய நிர்வாகிகளின் குழந்தைகளை, ஆன்லைன் வகுப்பில் இணைக்க மறுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சுமார் 1,200 குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில், ஒரு தரப்பினரின் குழந்தைகளுக்கு, கல்வி உரிமை மறுக்கப்படுவது குறித்து மாணவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு தங்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும், வெளியே சொன்னால் தங்களது வேலை பறிபோகும் நிலை உள்ளதால், வாய்மூடி மௌனம் காப்பதாக, சில ஆசிரியர்கள் தெரிவித்த ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களிலும் உலா வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகாரளிக்க கூடாது என மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதிலும், மாணவர்கள் பழிவாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
உடனடியாக, இப்பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி, சைபர் க்ரைம் அதிகாரிகளின் துணையுடன், ஆன்லைன் வகுப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும், எனவும் வலியுறுத்தி உள்ளனர். புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகள் வராது என்று கூறும் இப்பகுதி மக்கள், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தனியாக ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், மாணவர்களின் கல்வி உரிமையை காக்க, முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள், என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.