“மூன்று ஆண்டுகள் சரியான பாதையில் மாணவர்களை வழி நடத்தினால், அவர்கள் அற்புதங்களை படைப்பார்கள்” என்பதே என் நம்பிக்கை என்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், செம்பொன்குடியில் பிறந்து வளர்ந்த ராமச்சந்திரன், குடும்ப வறுமையால் தன் கல்லூரி படிப்பை முடிப்பதற்கே பல சிரமங்களை கண்டுள்ளார். 40 வயதான இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், திரவியம் ராஜ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். 2005-ல் தொடக்கபள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்த இவர், பணியில் இருந்து கொண்டே பிஎஸ்சி கணிதம், பிஎட், எம்எஸ்சி கணிதம் படித்து முடித்தார். 2008ல் போகலூர் ஒன்றியம் கிழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு இப்பொழுது வரை அங்கு பணிபுரிந்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு பயிலும் 30 மாணவ- மாணவிகளுக்கு தன் சொந்த செலவில் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி கொடுத்தது மட்டுமில்லாமல் அதில் ஐசிடி (information communication technology ) தொழில்நுட்பம் மூலம் படிப்பிற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
மேலும் பியானோ, சிலம்பம், ஓவியம் என்று மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் இவர் பள்ளி வளாகத்தை பசுமையாக வைக்க மூலிகை தோட்டத்தையும் அமைத்துள்ளார். தனது 80% சம்பளத்தை மாணவர்களுக்கே செலவு செய்யும் இவர், தனது மனைவியின் துணையின்றி இது சாத்தியம் இல்லை என்கிறார்.
பொற்காசு திட்டத்தில் வாரம் ஒரு முறை போட்டிகளை நடத்தி அதற்கு நாணயங்களை பரிசாக வழங்கி அதை தனி உண்டியலில் சேர்த்து வைக்க ஊக்கப்படுத்துகிறார்.
இப்படி மாணவர்களுக்கு வெறும் ஆசிரியராக மட்டும் இல்லாமல், எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பதால் என்னவோ மாணவர்கள் இவரை உறவு முறை வைத்துதான் அழைக்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 46 ஆசிரியர்களில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் ராமச்சந்திரன் மட்டும் தான். மாணவர்களின் கனவுநாயகனாக விளங்கும் இவருக்கு நல்லாசிரியருக்கான தேசிய விருது கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை.