ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், சிவகங்கை – மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி – மானாமதுரை மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே ஆகஸ்ட் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக ரமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.
மேலும் திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை சிவகங்கை – மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
திண்டுக்கல் – அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.
இதே காலத்தில் சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்