மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், மதமாற்ற நடவடிக்கை காரணம் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தஞ்சை பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தூய இதய மரியன்னை சபை சார்பில் அருட்சகோதரி பாத்திமா பவுலா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூய இருதய பள்ளி 160 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், 90 ஆண்டுகளாக விடுதி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் மண்ணில் பெண் கல்வியிலும், பெண் விடுதலையிலும் தங்கள் சபை பங்களிப்பு முதன்மையானது என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் தங்கள் பள்ளிகளே பொதுக்கல்விக்கான விடியலாய் அமைந்ததாகவும் அருட்சகோதரி பாத்திமா பவுலா குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள் என்றும், அனைவருக்குமான சமய சார்பற்ற கல்வியை அளித்து வருவதாகவும், யாருடைய மத நம்பிக்கையிலும் குறுக்கிடுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவி அளித்துள்ள இறுதி வாக்குமூலத்தில், விடுதி காப்பாளர் மீது குற்றம் சுமத்தியதாக அறிவதாகவும், காவல் மற்றும் கல்வித்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் அருட்சகோதரி பாத்திமா பவுலா தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தை ஒரு பிரிவினர் அரசியலுக்காக கையில் எடுத்து, பொய்களை விதைப்பதும், திசைத்திருப்புவதும், பள்ளிக்கு களங்கம் கற்பிப்பதும் தொடர்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மதமாற்ற நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிற்கு எந்த விதத்திலும் தங்கள் நிறுவனங்களில் எந்த அடிப்படையும் இல்லை என்றும், இதற்கு, தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களே சாட்சி என்றும் அருட்சகோதரி பாத்திமா பவுலா தெரிவித்துள்ளார்.