மே 11 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் கிடைக்கும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக மாநிலம் முழுவதும், தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆக்சிஜன் பற்றாக்குறை தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அதன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக தொழிற்துறையினர் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனையில், தொழில்துறையினர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சத்திரன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தொழிற்துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டன.
முழு ஊரடங்கின் அவசியம் குறித்து எடுத்துரைத்தோம். மருத்துவ ஆக்சிஜன் உற்பத் தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப் பட்டது. தொழிற்துறையினருடன் ஆலோசித்து புதிய திட்டத்தை வகுத்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வரும் 11 ஆம் தேதி முதல் கிடைக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கிற்கு தொழிற்துறையினர் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் என்றார்.