கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தமிழக டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள காவலர்களுக்கும், உடல்நலக் குறைவு உடையோருக்கும் இலகுவான பணி ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட காவலர்கள் மட்டுமே கூட்டம் நிறைந்த பகுதிகளில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் காவல்துறையினர் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர்களை கண்ணியதுடன் நடத்த வேண்டும் எனவும் தடியடி, பலப்பிரயோகம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். ஊரடங்கை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையங்களில் குற்றவாளிகளை அடைத்து வைக்க கூடாது என்றும் காவலர்களை 5 மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் பெண் காவலர்களை வாகன சோதனை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் தமிழக டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.







