விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது என எம்ஜிஆரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அவர், ”தன் குடும்பத்தை வாழ வைப்பதற்காக கருணாநிதி திமுகவைப் பயன்படுத்தினார். அவரது மகன் ஸ்டாலின் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றி யோசிக்காமல், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களை கைவிட்டுவிட்டார். திமுக அரசு விடிகின்ற அரசாக இல்லை. விடியா அரசாக இருக்கின்றது. இந்த ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை. ஆட்சி குறித்து பொதுமக்கள் எதிர்த்து பேசினால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை. முதல்வர் ஸ்டாலினைச் சுற்றி பெருங்கூட்டம் உள்ளது. அவரால் செயல்பட முடியவில்லை. திமுகதான் தொடர்ந்து ஆளும் என்ற எண்ணம் திமுகவிற்கு வந்துவிட்டது. இதேபோல்தான் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாங்களும் நினைத்தோம். ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் ஒரே ஆண்டில் எல்லாம் மாறும்.
ஸ்டாலின் ஆட்சி வெறும் விளம்பர ஆட்சியாக உள்ளது. விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது. நீட் தேர்வு விலக்கிற்கு முதல் கையெழுத்து எனக் கூறியவர்கள் ஏன் இன்னும் கையெழுத்து போடவில்லை? கையெழுத்து போட போனா இல்லையா? தந்தையின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசை நாடிய திமுக ஏன் நீட் விலக்கு கோரி மத்திய அரசை நாடவில்லை? அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு வெள்ளை அடித்து கல்வெட்டுகளை திறந்து வைக்கின்றனர் திமுகவினர்” என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தேர்தலுக்கு முன்பே 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கூறியதாகவும், அதற்கு அவர் மீண்டும் நாம்தான் ஆட்சி அமைப்போம்; ஆட்சிக்கு வந்த பின்பு திறப்போம் என கூறியதாகவும், அப்பொழுதே தனக்கு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தால் என்ன செய்வது என்று தோன்றியதாகவும் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
– ஜெனி