முதலமைச்சராக பதிவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று புதிய கட்டுபாடுகளை தமிழக அரசு வெளியிட்டிருந்த்து. அதில் அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனவும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் எந்தத் தடையுமின்றி நடைபெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்துகிறார்.







