திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்
போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் பகல் பத்து இரண்டாம் நாள் திருவிழாவான இன்று உற்சவர் நம்பெருமாள் முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவழ மாலை அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
கோவிந்தா கோபாலா வேங்கடா பிரபு மந்திரம் முழங்க மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார். இன்று 8 மணி முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யவும் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்தில் இருந்த புறப்பட்டு நம்பெருமாள் மீண்டும் 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் இரண்டாம் திருநாளான இன்று
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதேசி பெருந்திரு விழாவை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாள் முத்தாங்கி சேவையில் காட்சியளித்தார்.
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்
சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்
அலுவலர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இத்திருவிழாவை பார்க்க வருகை தருவார்கள் என்பதால் ஆலயத்தை சுற்றி குடிநீர் கழிப்பறை போன்ற ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஆலயத்தின் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுமார் 292 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கார்த்திகை கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதேசி திருவிழா வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி நடைபெறுகிறது.







