இலங்கை சிறையில் உள்ள 29 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்று பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி 31ம் தேதியன்று 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 21 மீனவர்கள் மட்டுமல்லாது மேலும் சிறையில் உள்ள 29 மீனவர்களையும் விடுதலை செய்ய வெண்டும் என பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 21 பேர் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 21 நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!” என தெரிவித்துள்ளார். மேலும்,
https://twitter.com/draramadoss/status/1495691963706019842
“விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்கள் தவிர, நேற்று முன்நாள் கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் உட்பட மொத்தம் 29 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.








